கொரோனா வைரஸை விடக் கொடிய நிமோனியாக் காய்ச்சல் கஜகஸ்தானில் பரவி வருவதாக சீனா முன்வைத்த குற்றச்சாட்டை கஜகஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.
கஜகஸ்தானில் கொரோனா வைரஸை விடக் கொடிய நிமோனியாக் காய்ச்சல் பரவி வருவதால் அங்குள்ள தனது குடிமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரித்து சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் உண்மை இல்லை என கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு தளர்த்தப்பட்டிருந்த முடக்க நிலை மீண்டும் நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 10ஆம் திகதி நிலவரப்படி, கஜகஸ்தானில் 55,000 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், 264 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கஜகஸ்தானில் நிமோனியா பரவி வருவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கஜகஸ்தானில் கோவிட்-19 நோய்த்தொற்று நோய் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உறுதிசெய்யப்படாத கொரோனா வைரஸ் நோய்த்தொற்றே இருக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பின் அவசரகதால திட்டத்தின் தலைவர் மைக் ரயான் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, உலகம்