ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா தொற்று நோயை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை 3-ஆம் கட்டமாகத் தளா்த்த மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஒன்ராறியோ முதல்வா் டக் ஃபோர்ட் இன்று திங்கட்கிழமை குயின்ஸ் பார்க்கில் இடம்பெறும் தினசரி செய்தியாளர் சந்திப்பி்ல் வெளியிடுவார் என சி.ரி.வி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவில் கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாகத் தளர்தப்பட்டது போன்ற படிமுறைகளிலே மூன்றாம் கட்டத்துக்குள்ளும் நுழையவுள்ளது.
ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட மாகாணத்தின் கட்டுப்பாடுகளைக் கட்டங்கட்டமாகக் தளர்த்தும் அரசின் திட்டப்படி மூன்றாம் கட்டத்தில் அனைத்து வணிக நிலையங்களும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
மக்கள் ஒன்றுகூடுவதற்காக கட்டுப்பாடுகளும் மேலும் தளர்த்தப்படும்.
இசைக் கச்சேரிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற பெரிய அளவில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
அதேவேளை, சில திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், சூதாட்ட மையங்கள், உள்ளக விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முதற்கட்ட அறிவிப்பை ஒன்ராறியோ கடந்த மே மாதம் வெளியிட்டது. ஜூன்-1 மற்றும் ஜூலை ஆரம்பத்தில் இரண்டாம் கட்ட தளா்வுகள் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.