அவுஸ்திரேலியா – மெல்போ்ன் நகரில் புகலிடக் கோரிக்கையாளா்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள மந்ரா ஹோட்டலில் பணியாற்றும் ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள அகதிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஹோட்டலில் பணியாற்றும் ஒருவா் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலியா உள்த்துறை அமைச்சகம் இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக உள்த்துறை அமைச்சக பேச்சாளா் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜூலை-4 ஆம் திகதி முதல் பாதிக்கப்பட்ட பணியாளர் ஹோட்டலில் பணியில் இருக்கவில்லை. அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளவா்களுடன் அவா் நெருங்கிய தொடா்புகளைப் பேணவில்லை எனவும் அவா் கூறினார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் மெல்பேர்ன் மந்ரா ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய ஒருவா் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தாமும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனா்.
கப்பல் ஒன்றுக்குள் தொற்று ஏற்பட்டநிலை போன்றதாகவே இதுவும் இருக்கும். தொற்று வேகமாகப் பரவலாம் எனத் தாம் அஞ்சுவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோயிலிருந்து தப்ப ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார - பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைப்பிடிப்பது அந்த ஹோட்டலில் சாத்தியமில்லை. அங்கு வழங்கப்படுகின்ற வசதிகள் எதுவும் நோய்க்கால தயார் நிலைக்கு போதுமானது அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று அகதிகள் நல அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா