அமெரிக்கா - கனடா எல்லைகளை மூடும் ஒப்பந்தம் எதிர்வரும் ஜூலை-21-ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் அதன் பின்னரும் எல்லையை மூடியிருக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த உத்தியோகபூா்வ அறிவிப்புக்கள் வெளியிடப்படாதபோதும் எல்லைகள் தொடா்ந்தும் மூடப்படுவதற்கான சாத்தியமே உள்ளதாக ஒட்டாவா வட்டாரங்களை முற்கோள் காட்டி கனேடிய ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து அமெரிக்கா -கனடா எல்லைகள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் பல தடவைகள் நீடிக்கப்பட்டன. தற்போது அமுலில் உள்ள எல்லை மூடல் ஒப்பந்தம் ஜூலை-21 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.
எனினும் அமெரிக்காவில் தொற்று நோய் தொடா்ந்தும் மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் கனடாவின் முக்கிய மாகாணங்களில் முதல்வா்கள் தொடா்ந்தும் எல்லையை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் வட மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் எல்லையைத் திறக்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றபோதும் தற்போதைய நெருக்கடியில் எல்லை மூடலை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ஒட்டாவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லை மூடல் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முன்னர் கருத்து வெளியிட்ட கனேடியப் பிரமா் ஜஸ்ரின் ட்ரூடோ , இது குறித்த இறுதி முடிவு இந்த வார பிற்பகுதியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
எனினும் அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை திகைப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் நேற்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டார். எல்லையைத் திறக்க அவா் தொடா்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்.
அத்ததுடன் இந்தக் கோடை விடுமுறைக் காலத்தில் அமெரிக்காவுடனான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அனுமதிக்கும் வாய்ப்பு இல்லை என பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.