அமெரிக்காவின் சான்டியாகோ கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் நேற்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றது.
தீயை அணைக்கும் பணிகளில் சிரமங்கள் உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அமெரிக்க பசிபிக் கடற்படையின் உயர் அதிகாரிகளில் தகவல்களின்படி நேற்று திங்கட்கிழமை மாலை நிலவரப்படி 36 கடற்படையினர் மற்றும் 23 பொதுமக்கள் உட்பட மொத்தம் 59 போ் சிறிய காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.
சான்டியாகோ துறைமுகத்தின் கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யு.எஸ்.எஸ். போன்ஹோம் ரிச்சர்ட் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் துறைமுகப் பகுதியைச் சூழ கரும்புகை சூழ்ந்துள்ளது.
840 அடி நீளமுள்ள அந்த கப்பலில் எந்த இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து நடைபெற்றபோது அந்த கப்பலில் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதும், இக்கப்பலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "யு.எஸ்.எஸ் ஃபிட்ஜெரால்ட் மற்றும் யு.எஸ்.எஸ். ரஸ்ஸல் ஆகிய இரண்டு கப்பல்களும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.