ராமர் நேபாள நாட்டில் பிறந்தவர். அவர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ள கருத்து இந்தியாவில் பெரும் சா்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது நேபாளத்திலேயே உள்ளது எனவும் அவா் குறிப்பட்டுள்ளமைக்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேபாள கவிஞர் பனுபக்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள கருத்து வெளியிடும்போதே இவ்வாறான சர்ச்சைக் கருத்துக்களை நேபாளப் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
நேபாள பிரதமரின் இந்த கருத்துக்கு நேபாளத்திலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா - நேபாள உறவை மேலும் சிதைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் பேச்சு உள்ளதாக அந்நாட்டு முன்னாள் துணைப் பிரதமர் கமல் தபா தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா நேபாள உறவு சுமுகமாக இல்லை. எல்லை சார்ந்த பிரச்சனை இரு நாடுகள் இடையே நிலவுகிறது.
1816இல் ஆங்கிலேயர்கள் மற்றும் நேபாளம் தரப்பினரிடையே கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதுரா பகுதியில்தான் மகாகாளி நதியின் மூலம் இருப்பதாக நேபாள அரசு கூறி வருகிறது.
ஆனால் அதனை ஏற்க மறுக்கும் இந்தியா, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்குக் கிழக்கேதான் அந்த நதி உருவாவதாகக் கூறுகிறது.
இந்நிலையில்தான் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு நேபாளம் நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
இந்நிலையில் நேபாளப் பிரதமரின் கருத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.