இந்தியாவின் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் 600 ஐ கடந்த தொற்று உறுதியாகியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று 623 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்தார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:
'கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாவது நாளாக நோயாளிகள் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளது. இன்று 623 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 96 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 76 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 432 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 37 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. சுகாதாரத் துறை ஊழியர்கள் 9 பேருக்கும், 9 ராணுவ வீரர்களுக்கும் இன்று நோய் பரவியுள்ளது.
இடுக்கி மாவட்டம் ராஜாக்காடைச் சேர்ந்த வல்சம்மா ஜாய் என்ற பெண் கொரோனா பாதித்து இறந்துள்ளார். இன்று 196 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 157 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 74 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 72 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 64 பேர் கோழிக்கோடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களையும், 55 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 35 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 25 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 20 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 19 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 18 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 11 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 5 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 4 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,443 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 1,84,601 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 4,989 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இதுவரை கேரளாவில் 9,553 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நோய் அறிகுறிகளுடன் 602 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 4,880 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 4,53,716 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 7,485 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.
சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நோக்கமுள்ள 82,568 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 78,415 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளாவில் இன்று நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் 16 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நோய் தீவீரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை. எனவே யாருக்கு வேண்டுமானாலும் நோய் பரவலாம். இதனால் நாம் தினமும் செல்லும் சந்தைகள், தொழில் செய்யும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உட்பட நோய்த் தடுப்புப் பணிகளில் தீவிரமாக இருக்க வேண்டும். ஆட்கள் கூட்டம் கூடுவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. நாம் கவனமாக இருந்தால்தான் நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.
உலகம் முழுவதும் நோயின் தீவிரம் அதிகமாகிக் கொண்டிருக்கும்போது நம் மாநிலத்தில் நோய் பாதிப்பு குறைவாக இருப்பதற்கு நம்முடைய கவனம் தான் முக்கியக் காரணமாகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பூந்துறை, புத்தன்பள்ளி மற்றும் மாணிக்கவிளாகம் பகுதிகளில் அதிக அளவில் நோய் பரவி வருகிறது.
இன்று திருவனந்தபுரத்தில் நோய் பரவிய 157 பேரில் 130 பேருக்குக் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 7 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று 5 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது.
கேரளாவுக்கு இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 5,81,488 பேர் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 3,63,731 பேரும், வெளிநாடுகளில் இருந்து 2,17, 757 பேரும் வந்துள்ளனர். கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 32 பேருக்கு இக்காய்ச்சல் பரவியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது'.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, கேரளா