கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை குறைக்கும் கனடாவின் கடின முயற்சியின் பயனாக அங்கு நாளாந்த இறப்புக்கள் பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி நகந்து வருகிறது.
எனினும் பல மாகாணங்கள் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிலையில் புதிய தொற்று நோயாளா்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொற்று நோயை அடுத்து கனடாவில் பல மாகாணங்கள் சமூக முடக்கல்களை அறிவித்து, சோதனைகளை விரைவுபடுத்தின. அத்துடன், கடியர்கள் கடுமையான பொது சுகாதார விதிகளைப் பின்பற்றினர்.
சில மாகாணங்கள் உள்ளகப் பயணங்களுக்குத் தடை விதித்தன. ஒட்டாவா சர்வதேச பயணங்களையும் தடைசெய்தது, அமெரிக்காவுடனான எல்லை மூடப்பட்டது. மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பராமரிப்பு இல்லங்களில் மீட்புப் பணிகளுக்காக இராணுவத்தினா் களமிறக்கப்பட்டனா்.
இந்நிலையில் கனடாவில் தொற்று நோய் மற்றும் இறப்புக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசாங்க தரவுகளின்படி கனடாவில் செவ்வாய்க்கிழமை 8 இறப்புக்களும் நேற்று புதன்கிழமை 13 இறப்புக்களும் பதிவாகின.இது மொத்த கோவிட்-19 இறப்புக்களை 8,811-ஆக அதிகரித்தது.
மொத்த தொற்று நோயாளா் எண்ணிக்கையும் செவ்வாயன்று 331 ஆகவும் நேற்று புதன்கிழமை 341 ஆகவும் பதிவாகின. இவற்றுடன் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கையை 108,802 ஆக உயா்ந்தது.
இந்நிலையில் மீண்டும் மாகாணங்கள் கட்டுப்பாடுகளைத் தளா்த்தி வருவதால் இதுவரை கனேடியர்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் மீண்டும் தொற்று நோயின் அதிகரிப்புக்கு மாகாணங்கள் தயாராகி வருகின்றன. அது தவிர்க்க முடியாதது என்றே நான் நினைக்கிறேன் என ரொரண்டோ பொது மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுகின்றன. எனினும் இதனால் அதிக எண்ணிக்கையான தொற்று நோயாளர்கள் பதிவானால் சில பகுதிகளில் மீண்டும் பொது சுகாதார கட்டுப்பாடுகளை நாங்கள் விதிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கியூபெக்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் உயரத் தொடங்கியுள்ளன. மொன்றியல் புறநகர் உள்ளிட்ட சில இடங்களில் புதிய தொற்றுக்களைக் கண்டறிந்துள்ளனர்.
ஒன்ராறியோவில் ஒரு வணிக மையத்தில் தொற்று நோயாளா்கள் கண்டறியப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமீபத்திய வாரங்களில் சில புதிய இறப்புகளைப் பதிவுசெய்தது. மக்கள் வழமைக்குத் திரும்ப முயலும்போது தொற்று நோயில் அதிகரிப்பு ஏற்படுவதைக் அவதானிக்க முடிகிறது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் ஒன்ராறியோ மாகாணம் மூன்றாம் கட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகி வருவதாக மாகாண முதல்வா் டக் ஃபோர்ட் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா