அமெரிக்காவின் - ஓக்லஹோமா மாகாண ஆளுநர் கெவின் ஸ்டிட் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மாகாணம் ஒன்றின் ஆளுநர் ஒருவா் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் சந்தா்ப்பம் இதுவாகும்.
எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நேற்று இணைய வழி நேரலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆளுநர் கெவின் ஸ்டிட் தெரிவித்தார்.
எனினும் எனது உடல் நிலை நன்றாக இருக்கிறது. என்னிடம் தொற்று நோய்க்கான எந்த அறிகுறிகளும் இதுவரை இல்லை எனவும் அவா் கூறினார்.
இதேவேளை, ஜூன் -20 ஆம் திகதி ஓக்லஹோமாவின் துல்சாவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேரணியில் விருந்தினர்களில் ஒருவராக ஸ்டிட் பங்கேற்றார்.
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாகாணங்களில் ஓக்லஹோமாவும் ஒன்றாகும். நேற்று புதன்கிழமை இங்கு 1,075 புதிய கொரோனா தொற்று நோயாளா்கள் பதிவாகினர்.
47 வயதான ஸ்டிட், ஓக்லஹோமா மக்களை முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தி வருகிறார். எனினும் மாகாணத்தில் முககவசங்களை அவசியமாக்கும் உத்தரவை அவா் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தொற்றுக்குள்ளான ஓக்லஹோமா மாகாண ஆளுநர் கெவின் ஸ்டிட் தன்னைத தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்து வேலைகளைக் கவனிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா