சீனாவின் தென் மாகாணங்களில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்துவரும் கடும் மழை மேலும் நீடிக்கலாம் என முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை மஞ்சள் நிறத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தொடா்ந்து இரு வாரங்களாகப் பெய்யும் கடும் மழையால் ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்சியில் (Yangtze) நீர் மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மழைக்கு ஏற்கனவே பலா் இறந்துள்ளனா், வரும் நாட்களில் வானிலை மோசமாகக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுமார் 141 பேரைக் காணவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடும் மழையால் கடந்த மாதம் முதல் சுமார் 22 இலட்சம் பேர் இடம்பெயா்ந்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் தேசிய ஆய்வகம் இன்று சனிக்கிழமையன்று மழை-வெள்ள அபாய எச்சரிக்கை மஞ்சள் நிறத்துக்கு உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அன்ஹுய், ஹெனன், ஹூபே, ஹுனான், குய்சோ மற்றும் யுன்னான் பகுதிகளில் மழை பெய்யும் என்று தேசிய வானிலை மையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் கன மழை பெய்யும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியதுடன், அபாயகரமான பகுதிகளில் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்த பரிந்துரைத்தது.
இதேவேளை, சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் இன்று அதிக வெப்பநிலை நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜெஜியாங், புஜியான், ஜியாங்சி, ஹுனான், குவாங்டாங், குவாங்சி, ஹைனான் மற்றும் சின்ஜியாங் ஆகியவற்றின் பகுதிகள் வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
இன்று சனிக்கிழமையன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸையும் தாண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிகப்படியான மின் நுகர்வு மற்றும் அதிக அளவு மின்சார உபகரணங்கள் பாவனை காரணமாக ஏற்படும் தீ விபத்துக்கள் தொடா்பில் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நான்கு வர்ணங்களில் குறியிடப்பட்ட வானிலை எச்சரிக்கை அமைப்பு உள்ளது, சிவப்பு மிகவும் கடுமையான எச்சரிக்கையைக் குறிக்கிறது, அதைத் தொடர்ந்து ஒரேஞ், மஞ்சள் மற்றும் நீல நிறங்கள் அபாய அளவுகளைக் குறிக்கின்றன.