சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையை முடிவை நோக்கி சென்றுள்ளது.
இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 469 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொணடது.
இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் பென் ஸ்ரோக்ஸ் 176 ஓட்டங்களையும், சிப்லி 120 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்துவீச்சில் காஷ் 5 விக்கெட்டுக்களையும், ரோச் 2 விக்கெட்டுக்களையும், ஜோசெப் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து தனது முதலாவது இனிங்சுக்காக களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அதிகபட்சமக பிராத்வெயிட் 75 ஓட்டங்களையும், ஷமர் 68 ஓட்டங்களையும், காஷ் 51 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்துவீச்சில் ஸ்ருவர்ட் பிரோட் மற்றும் வோகஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கர்ரன் 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் 182 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2வது இனிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 37 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இதுவரை 219 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று போட்டியின் இறுதி நாள் என்பதால் கணிசமான ஓட்டங்களை பெற்று சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியை துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணி சந்தர்ப்பம் வழங்கலாம்.
எவ்வாறு எனினும் இப் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடையவே அதிகம் வாய்ப்புள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1:0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து