ஐ.டி.எச். மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நிலையில் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர் மூலம் கொழும்பில் சமூகப் பரவல் அபாயம் ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் கந்தகாடு போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை, வெள்ளை மணல் கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பளிங்கு கடற்கரை வீதி, சீனன்குடா எனும் முகவரியைச் சேர்நத 41 வயதான மொகம்மட் காசிம் மொகம்மட் நாசிம் என்ற நபரே முல்லேரியாவில் உள்ள ஐ.டி.எச். மருத்துவமனையில் இருந்து நேற்று அதிகாலை 2.00 மணிக்கு தப்பியிருந்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலில் இவரும் இலக்காகியிருக்தமை பரிசோதனைகளில் தெரிய வந்தது. இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெலிகந்தை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மொகம்மட் காசிமுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்ததால் அங்கிருந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தான் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு அங்கிருந்து தப்பியுள்ளார். உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை பணியாளரால் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தப்பி ஓடியவரை கண்டு பிடிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அவரது புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு பொதுமக்களிடமும் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில்தானல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து இனம்காணப்பட்டு கைது செய்யப்பட்டு மீண்டும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புறக்கோட்டையில் இருந்து தனது கால் இயலாமையை காட்டி அதற்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறி முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். முச்சக்கர வண்டிக்கு வாடகை கூட கொடுக்காது இறங்கிய அவர் நான் தான் ஐ.டி.எச். இல் இருந்து தப்பியவன் என்று கத்திக் கொண்டு வெளிநோயாளர் பிரிவுக்கு ஓடிச்சென்றுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 5ம் இலக்க நுழைவாயிலில் கடமையில் இருந்த இரு ஊழியர்கள், ஊடகங்கள் மூலமாக அவர் குறித்த தகவலை ஏற்கனவே அறிந்திருந்தமையால் அவரை இனம் கண்டு வேறு இடங்களுக்கு செல்லவிடாது ஓரிடத்தில் இருத்தியதோடு பாதுகாப்பு தரப்பிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதன்பின்னர் அங்கு சென்ற பாதுகாப்பு தரப்பினர் அவரை கைது செய்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் புறக்கோட்டையில் இருந்துமு ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியை பொறுப்பேற்று கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க அதிகாலை 2.00 மணிக்கு அங்கொடை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை ஜன்னல் வழியாக குதித்து வெளியேறியவர் சுவர் ஏறி குறித்து தப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது. அங்கொடை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் இருந்து புறக்கோட்டைக்கு எவ்வாறு சென்றார் அதிகாலை 2.00 மணி முதல் எங்கெங்கு நடமாடினார் என்ற விபரங்கள் எவையும் இன்றும் கண்டறியப்பட்வில்லை.
இதையடுத்து அவரது நடமாட்ட வழித்தடத்தை கண்டறிவதற்காக சி.சி.ரி.வி. காணொளிப் பதிவுகள், அறிவியல் தடயங்களின் அடிப்படையில் இராணுவ மற்றும் புலனாய்வு தரப்பினர் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
இந்தப்பின்னணியில் கொழும்பில் சமூகப் பரவல் அடிப்படையில் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அவ்வாறு அச்சமடைவதற்கான எந்த காரணிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு