வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எனினும் நாட்டில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உற்சவத்தினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கைகளைக் கழுவி மாஸ்க் அணிந்து அடையாள அட்டை அல்லது தமது ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்தக் கூடிய ஆவணத்தை போலீசாரிடம் காண்பித்து ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆலயத்தின் உட்புறத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடியார்கள் அனுமதிக்கப்பட்ட தோடு ஆலயத்தின் உட்புறத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றகூடியவாறு ஆலய நிர்வாகத்தினரால் மக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் ஆலயத்திற்கு வெளியிலும் பொலிசாரினால் சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டு வராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
எனினும் வழமைக்கு மாறாக இம்முறை பலத்த கட்டுப்பாடுகளுடன் ஆலய உற்சவத்திற்கு பெருமளவில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். பாதுகாப்பு கடமையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்களை சோதனை சாவடிகளில் சோதனையிடும் நடவடிக்கையினை போலீசார் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்