இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளருமான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தம் முடிந்ததன் பின்னர் தலைமைத்துவம் இல்லாத இனமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுடைய பலம் எங்களுடைய இருப்பு எங்களுடைய அடையாளம் மொழி கலாசாரம் எல்லாவற்றையும் இணைத்து பயணிக்க வேண்டிய தேவை உள்ளது. நாங்கள் எங்களுடைய ஒற்றுமையை நி லைநிறுத்தாவிட்டால் எங்களுடைய இனம் பெரியதொரு கேள்விக்கு உட்படுத்தப்படுவதுடன் சவாலுக்கும் உட்படுத்துப்படும். இதனூடாக எங்களுடைய தனித்துவம் அழிக்கப்படும். இதற்கான முயற்சிகள் பல ஆண்டு காலமாக எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தற்போது வன்னியில் கோட்டபாய அரசாங்கம் இதற்காக பெரும் முயற்சியை எடுக்கின்றது.
இந்த பகுதியில் ஒரு இராணுவ அதிகாரியை அல்லது சிங்களவர் ஒருவரை வன்னி மக்களால் தெரிவு செய்வதற்காக முயற்சிக்கின்றது.
ஏனெனில் இன்று நாட்டை ஆளுகின்ற ஜனாபதிபதி இராணுவம் 2019 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு எங்கடைய பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவத்தினருக்கு வித்தியாசமான தைரியம் கிடைத்துள்ளது, இராணுவத்தினர் முன்பிருந்ததை போல் அல்ல. எங்களுடைய மக்களை வஞ்சிக்கின்ற அடக்கி ஆள நினைக்கின்ற முழுமையான செயற்பாட்டிற்கு இராணுவம் வந்துள்ளது.
இன்று பல துறைகளிலும் இராணுவத்தினருக்கு பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இராணுவ வீரர்களை கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த நோக்கத்திலேயே வன்னியிலும் இராணுவ அதிகாரியொருவர் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளார்.
அந்த இராணுவ அதிகாரி வன்னியில் வெற்றி பெற்றால் எங்கள் இனத்தின் இருப்பு என்ன ஆகும் என்பதனை சிந்தித்து பாருங்கள். எங்களுடைய பிரதேசத்தில் இராணுவத்துடன் சம்பந்தமில்லாத பல விடயங்களுக்கு இராணுவம் சம்பந்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
எமது மக்கள் விவசாயம் செய்த காணிகளில் தற்போது விவசாயம் செய்ய விடாமல் இராணுவம் தடுத்து வருகின்றது. இராணுவம் எந்த நிர்வாகத்தில் ஈடுபடுவது என்ற நிலை இல்லாமல் போய்விட்டது.
எனவே எங்களுக்குள்ள ஆபத்தை தெரியாமல் நாங்கள் பிரிந்து நின்றால் எமக்கு பெரும் ஆபத்து வந்து சேரும். எனவே நாங்கள் ஒரே அணியாக இருக்க வேண்டும்.
எனவே நாம் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்காவிட்டால் அது சிங்கள அல்லது முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரையே கொண்டு வர வழிவகுக்கும். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மக்கள் நலன் சார்ந்து பிரியவில்லை. அவர்களது செயற்பாடு தன்னலம் சார்ந்த சுயநலம் சார்ந்த செயற்பாடாகவே இருக்கின்றது.
சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு முன்னால் வந்து கதைக்க முடியாமையினால் எவரும் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருகின்றனர் இல்லை. எங்கள் இனத்தின் தனித்துவத்திற்காக நான் உழைத்தவன். தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் எமக்குள்ள பலத்திற்கு அமைய மக்கள் நலன் சார்ந்த செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எனவே மக்கள் எமக்கான பலத்தை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா