இந்தியாவில் கொரோனா ஆதிக்கம் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நாளாந்த கொரோனா நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்றும் உயிரிழப்பும் தொடர் அதிகரிப்பாக இடம்பெற்று வருகிறது.
இன்று காலை 8.00 மணி வரையான நிலவரத்தின் அடிப்படையில் 49 ஆயிரத்து 931 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 14 இலட்சத்து 35 ஆயிரத்து 453 ஆக அதிகரித்து 14 இலட்சத்தை கடந்துள்ளள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 708 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 3 இலட்சத்து 75 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக தமிழ்நாட்டில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 3494 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு புது டெல்லியில் 3 ஆயிரத்து 827 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 606 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் ஆயிரத்து 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 96 ஆயிரத்து 298 பேருக்கும் கர்நாடகாவில் 1878 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 96 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை 9 இலட்சத்து 17 ஆயிரத்து 568 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 4 இலட்சத்து 85 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்தும் 3வது இடத்தில் இருந்து வருகிறது.
இதுவரை உலகளவில் ஒரு கோடியே 64 இலட்சத்து 20 ஆயிரத்து 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 இலட்சத்து 52 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
43 இலட்சத்து 71 ஆயிரத்து 839 தொற்றுகளுடன் அமெரிக்க யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உச்ச நிலைபெற்று முதலாவது இடத்திலும் 24 இலட்சத்து 19 ஆயிரத்து 901 தொற்றுகளுடன் பிரேசில் 2வது இடத்திலும் நீடிக்கிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, அமெரிக்கா, உலகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, புது தில்லி