அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் - ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனாவின் செங்டு மாகாணத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை சீனா மூடியுள்ளது.
சீனாவின் உத்தரவையடுத்து மூடப்பட்ட அமெரிக்க தூதரகத்தில் இருந்து ராஜதந்திரிகள் மற்றும் பணியாளா்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை காலை செங்டுவில் அமெரிக்க தூதரகம் அமைந்திருந்த வளாகத்தை கையகப்படுத்தியதாக சீனா தெரிவித்துள்ளது.
காலை 10 மணியளவில் தூதரகம் மூடப்பட்டது. பின்னர் அதிகாரிகள் கட்டிடத்திற்குள் நுழைந்து வளாகத்தை கையகப்படுத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-சீனா இடையே நாளுக்குநாள் மோதல்போக்கு அதிகரித்து வருகிறது.
இந்தப் பனிப்போரின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா திருடி வருவதாகக் குற்றஞ்சாட்டி ஹூஸ்டன் நகரத்திலிருந்த சீன தூதரகத்தை அமெரிக்கா கடந்த வாரம் மூடியது.
இந்நிலையில் இதேபோன்றதொரு குற்றச்சாட்டை அமெரிக்கா மீது சுமத்தி செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.
செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் பல ஆண்டுகளாக சீனாவின் தனிப்பட்ட தகவல்களைத் திருடிவந்ததாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் குற்றம் சாட்டினார். இதனாலேயே தூதரகத்தை மூட உத்தரைவிட்டதாகவும் அவா் கூறியுள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டு இதேபோல சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. அதனைத் தொடா்ந்து தற்போது செங்டு மாகாணத்தில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.