சூடானின் - டார்பூர் பிராந்தியத்தில் ஒரு கிராமத்துக்குள் புகுந்து ஆயுததாரிகள் நடத்திய சரமாரித் துப்பாக்கிச் சூட்டில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
மேற்கு டார்பூர் மாநிலத்தில் உள்ள மாஸ்டெரி கிராமத்தில் சனிக்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரிகள் மக்களைச் சுட்டுக்கொன்றதுடன், பல வீடுகளையும் எரித்ததனர். அத்துடன் சந்தைகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டன எனவும் ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தச் சம்பவம் குறித்து சூடானிய அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, டார்பூா் பிராந்தியத்தில் அண்மைக் காலங்களாக வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேலதிக பாதுகாப்புப் படைகளை அனுப்ப சூடான் அரசு திட்டமிட்டுள்ளதாக அரச செய்தி நிறுவனமான சுனா தெரிவித்துள்ளது.
மக்களைப் பாதுகாப்பதற்காக ஐந்து மாநிலங்களுக்கு மேலதிக படைகள் அனுப்பப்படும் என பிரதமர் அப்தல்லா ஹம்டோக் கார்ட்டூமில் டார்பூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, தெற்கு டார்பூர் மாநிலத்தில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் சமூகத் தலைவர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதனைவிட வடக்கு டார்பூர் மாநிலத்தில் அல்-ஜார்ஃப் பகுதியில் விவசாயிகளுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தகராறில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பாதுகாப்புப் படையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர்.
வடக்கு டார்பூரில் சமீக காலங்களாக வன்முறைகள் அதிகரித்து வருவதை அடுத்து ஜூலை 13 அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பங்களும் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன.