வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் இன்றையதினம் றிசாட்பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களிற்கிடையில் இடம்பெற்ற மோதலில் 4பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றயதினம் இரவு 09 மணியளவில் சாளம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மஸ்தானின் ஆதரவாளர்கள்,
செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம். இதன்போது அங்குவந்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் தம்மீது தாக்குதல் நடத்தினர். இதனால் தமது ஆதரவாளர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், தமது வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த றிசாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் தமது கிராமத்தில் அரசியல் வாதிகளின் சுவரொட்டிகள் எவையும் ஒட்டுவதற்கு தாம் அனுமதிப்பதில்லை என்றும் இது கிராமத்தில் வசிக்கும் பெரும்பாண்மையான மக்களின் முடிவாக இருக்கும் நிலையில், மஸ்தானின் ஆதரவாளர்கள் கிராமத்திற்குள் வருகைதந்து சுவரொட்டிகளை ஒட்டமுனைந்ததாகவும், அதனை தடுக்கமுற்பட்டபோது தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இதேவேளை தமது கிராமத்தை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தால் இரண்டுதரப்பின் ஆதரவாளர்களும் சாளம்பைக்குளம் பகுதியில் ஒன்றுகூடியிருந்தனர் இதனால்பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பூவரசங்குளம் பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் குழப்பநிலையை கட்டுப்படுத்தியிருந்தனர்.
இரவு 12 மணிக்கு பின்னர் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிபடையினர் மற்றும் துப்பாக்கி ஏந்தியபொலிசார் சாளம்பைக்குளம் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சந்திக்கசென்றதாக தெரிவிக்கப்படுபவரின் குடும்பத்தினர் பாதுகாப்புகருதி பொலிசாரால் அழைத்துச்செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா