"தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நாம் ஜனநாயக வழியில் போராடி வருகின்றோம். தமிழர் உரிமைக்கான இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து பயணிப்பதோ - அமைச்சுப் பதவிகளைப் பெறுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
"எமது போராளிகளின் அர்ப்பணிப்பு வீணாகிவிடக் கூடாது. அவர்களின் அர்ப்பணிப்பு வீணாகும் வகையில் அரசுடன் இணைந்து அறைகுறைத் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கவேமாட்டோம். முழுமையான தீர்வு கிடைக்கும்வரை நாம் அயராது போராடுவோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்..
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அபிவிருத்திக்காகத் தமிழர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கவே மாட்டோம். அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவி பெறவேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை. அந்த நோக்கம் - விருப்பம் எமக்கு இருந்திருந்தால் கடந்த '2018 ஒக்டோபர் அரசியல் சதிப்புரட்சி'யின்போது மஹிந்த அணிக்கு ஆதரவு வழங்கி வலுவுள்ள அமைச்சுப் பதவிகளையும் நாம் பெற்றிருக்கலாம். அந்த அரசியல் சதிப்புரட்சியை முறியடித்த பெரும் பங்கு எமக்கு உண்டு.
கடந்த ஆட்சியில் நாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டே வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். அரசுக்கு அழுத்தம் கொடுத்தே இந்த அபிவிருத்தியை மேற்கொண்டோம். எமது உரிமையை விட்டுக் கொடுத்து இந்த அபிவிருத்தியை நாம் மேற்கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரித்துக்கொண்ட கொள்கையில் எப்போதும் உறுதியாக நிற்கும். எனவே, கூட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எமது மக்களின் கைகளில்தான் இருக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குங்கள். தமிழர் தாயகத்தில் எமக்கான பெரு வெற்றியை நிலைநாட்டுங்கள்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை