கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் பிரிட்டனில் அதிகரித்துவரும் உடல் பருமன் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் 12.8 மில்லியன் டொலர் மதிப்பில் உடற்பருமனுக்கு எதிரான இயக்கம் ஒன்றை பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
தான் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதற்கு உடற்பருமன் ஒரு காரணம் என்று நம்புவதாக பிரதமா் தெரிவித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடற்பருமனால் கொரோனாவால் வைரஸ் தொற்று ஆபத்து அதிகரிப்பது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த இயக்கத்தின் ஊடான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோன்சனின் பேச்சாளர் கூறினார்.
நாட்டின் உடல் பருமன் பிரச்சினையை சமாளிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் திங்களன்று அறிவித்த திட்டங்களின் கீழ் உணவகங்களில் உணவுகளின் கலோரிப் பெறுமானங்கள் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் தொடா்பான விளம்பரங்கள் இரவு 9 மணிக்கு முன் ஒளிபரப்பப்படுவதும் தடைசெய்யப்பட்ட பிற நடவடிக்கைகளில் அடங்கும்.
நாட்டின் அதிகரித்துவரும் உடல் பருமன் சிக்கலைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது இது முதல் தடவையல்ல. எனினும் கொரோனா தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் இது குறித்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடுமையாகப் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட எட்டு சதவீதம் பேர் உடல் பருமனுடன் உள்ளவா்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சாதாரண எடை கொண்டவா்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை 3 வீதமே எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வயது வந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆரோக்கியமான எடையை விட அதிக எடை கொண்டவா்களாக உள்ளனர் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் எடையை குறைப்பது கடினம்தான். ஆனால் சில சிறிய மாற்றங்களால் நாம் அனைவரும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் உணர முடியும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து