சீனாவின் - வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பத்தில் அந்த தொற்று நோயின் தீவிரத்தை உள்ளூர் அதிகாரிகள் மூடிமறைத்துவிட்டதாக ஹொங்கொங்கைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளரும் அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் குவோக்-யுங் யுயென் (Dr Kwok-Yung Yuen) தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி – 12-ஆம் திகதி வுஹானில் இருந்து 700 மைல் தொலைவில் உள்ள ஷென்சென் நகரில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளாக குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள் வுஹானின் கொரோனா பரவல் மையமாக அடையாளம் காணப்பட்ட பகுதிக்கு வந்திருந்தனர்.
அவா்களை பரிசோதித்த பின்னர் இதுவொரு புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய். இது மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவுவதற்கான ஆதாரங்களைக் காண முடிகிறது என பீஜிங்கில் உள்ள அதிகாரிகளை பேராசிரியர் குவோக்-யுங் யுயென் எச்சரித்தார்.
ஆனால் இப்போது கிட்டத்தட்ட 650,000 மக்களைப் பலியெடுத்ததுடன், 16 மில்லியனுக்கும் அதிகமானவா்களுக்குத் தொற்றியுள்ள கொரோனா வைரஸ் குறித்து 8 நாட்கள் தாமதமாகவே உலகை பீஜிங் எச்சரித்தது எனவும் திங்கட்கிழமை பி.பி.சி. நிகழ்ச்சியான பனோரமாவுடன் பேசிய பேராசிரியர் குவோக்-யுங் யுயென் தெரிவித்தார்.
வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று தொடா்பான விசாரணைக்கும் பேராசிரியர் குவோக்-யுங் யுயென் உதவினார்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் மையப்பகுதியான வுஹானை தமது விசாரணைக் குழு அடைந்த நேரத்தில் தொற்று மையமான ஹுவானன் வனவிலங்கு சந்தையில் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டதோடு, விசாரணை நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் இருந்ததாக அவா் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஹுவானன் சந்தைக்கு சென்ற போது, அங்கு அனைத்தும் முன்னரே சுத்தம் செய்யப்பட்டுத் தடயங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தின் விசாரணை மேற்கொள்ள எதுவுமே இல்லை.
மனிதர்களுக்கு வைரஸை பரப்பக் கூடிய எதையும் எங்களால் அங்கு அடையாளம் காண முடியவில்லை எனவும் பேராசிரியர் குவோக்-யுங் யுயென் பி.பி.சியிடம் கூறினார்.
வுஹானில் கொரோனா பரவியதற்கான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன என்று நான் சந்தேகிக்கிறேன். உடனடியாக தகவல்களை அனுப்ப வேண்டிய உள்ளூர் அதிகாரிகள் இதை உடனடியாக செய்ய அனுமதிக்கவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலகை முதலில் எச்சரித்த வுஹானைச் சோ்ந்த மருத்துவா் லீ வென்லியாங் (Dr Li Wenliang), தகவலை கசிய விட்டதற்காக தண்டிக்கப்பட்டார் என கூறப்பட்டது. இறுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு கடந்த பெப்ரவரியில் அவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா