ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா தொற்று நோயாளிக்கு நல்ல பலனை அளிக்கவில்லை என அமெரிக்காவின் சிரேஷ்ட சுகாதார வல்லுனர்கள் தெரிவித்த பின்னரும் அந்த மருந்து கொரோனாவுக்கு எதிராகப் பயன்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை தான் பரிந்துரைத்தால்தான் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதையாவது நல்லது என்று நான் கூறினால், அது கூடாது என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள் என செய்தியாளா்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
தீவிர உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுச் சபை கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கோவிட்-19 சிகிச்சைக்காக அவசரமான சூழ்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் அந்த அமைப்பு இரத்து செய்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் பலனளிக்கிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.