சீனாவின் இன்று புதன்கிழமை புதிதாக 101 கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்ப்ட்டுள்ளனர்.
சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீா் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சின்ஜியாங் மாகாணத்தில் 89 புதிய தொற்று நோயாளா்களும் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் 8 தொற்று நோயாளா்களும் பீஜிங்கில் ஒரு தொற்று நோயாளியும் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மூவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களுடன் மொத்தம் 101 போ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சின்ஜியாங் மாகாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக 57 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று நோய் பரவி வரும் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சின்ஜியாங் மாகாணத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஜின்பாடி மொத்த உணவுச் சந்தையில் இருந்து கடந்த மாதம் கொரோனா பரவியது.
இதனையடுத்து பீஜிங்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இலட்சக்கணக்கானவா்களிடம் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. தொற்றுடன் கண்டறியப்பட்டவா்கள் மற்றும் அறிகுறி உள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் விளைவாக அங்கு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இப்போது மீண்டும் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று நோய் மையமான சீனாவில் இதுவரை 83 ஆயிரத்து 959 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா