ரஷ்யாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்துக்குள் உள்நாட்டு ஒழுங்குமுறை அதிகாரசபையின் அங்கீகாரத்தை பெறும். அதனைத் தொடா்ந்து விரைவில் முன்னணி சுகாதார பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் என இந்த தடுப்பூசி ஆய்வுடன் நெருக்கமான வடடாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டா்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி மனிதப் பரிசோதனையில் வெற்றிபெற்றுள்ளதாக மொஸ்கோவில் உள்ள கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்தத் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் கொரோனா வைரஸூக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை மனிதா்களின் உடலில் தூண்டுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் ஆரம்பத்தில் பெரிய அளவிலான சோதனைகளைத் தொடங்க இந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
ரஷ்யாவில் மருந்தாக்கல் ஒழுங்குறை அதிகாரிகளிடமிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் இந்த தடுப்பூசிக்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஒப்புதல் பெறப்பட்டால் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற்ற உலகில் முதல் நாடு என்ற பெருமையை ரைஷ்யா பெறும். இந்தத் தடுப்பூசிக்காக ஒப்புதல் கிடைத்ததும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ரஷ்ய சுகாதார ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என இந்த தடுப்பு மருந்து ஆய்டன் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆகஸ்ட் 10 முதல் 12-ஆம் திகதிக்குள் முதல் தடுப்பூசிக்கான ஒப்புதல் கிடைக்கலாம் என ரஷ்யாவின் இன்டர்ஃபொக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் ரஷ்யாவின் தடுப்பூசி மேம்பாட்டு முயற்சிகளை ஒருங்கிணைத்து நிதியளிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) பத்திரிகை சேவை இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் ரஷ்யா தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பில் சமரசம் செய்வதாக வெளியாகியுள்ள கூற்றுக்களை அதன் தலைவரான கிரில் டிமிட்ரிவ் மறுத்துள்ளார்.
தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதி செய்யும் விவகாரத்தில் ரஷ்யாவில் சுகாதார அமைச்சு எந்த சமரசங்களையும் செய்யாது என டிமிட்ரிவ் செவ்வாயன்று கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்