அவுஸ்திரேலியாவில் 2019-2020 காலப்பகுதியில் பேரழிவுகளை ஏற்படுத்திய காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 3 பில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டோ அல்லது இடம்பெயர்ந்தோ இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டம் முழுவதும் பற்றி எரிந்த தீக்கு 143 மில்லியன் பாலூட்டிகள், 180 மில்லியன் பறவைகள், 51 மில்லியன் தவளைகள் மற்றும் 2.5 பில்லியன் ஊர்வன ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன .
அனைத்து விலங்குகளும் தீப்பிழம்புகள் அல்லது வெப்பத்தால் கொல்லப்பட்டிருக்காது. காட்டுத்தீயின் புறத்தாக்கங்களான உணவின்மை, நீரின்மை போன்றவையும் மில்லியன் விலங்குகளின் இறப்புக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்ய இயற்கைக்கான உலகளாவிய நிதியம் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. அந்த ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட தீ அவுஸ்திரேலிய மாநிலங்களை கடுமையாக பாதித்தது, அதில் சுமார் 33 பேர் அங்கு உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் மற்றும் தவளைகள் என ஏராளமான ஜீவராசிகள் கொல்லப்பட்டன. ஜனவரி மாதம் தீவிபத்து உச்சத்தில் இருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலத்தில் 125 கோடி விலங்குகள் உயிரிழந்திருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர்.
தீயில் கருகி இறந்த சுமார் 113 வகையான விலங்குகளை அரசு அடையாளம் கண்டுள்ளது என இந்த தீ விபத்து குறித்து தெரிவித்துள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் டிக்மேன் கூறியுள்ளார்.
புதிய புள்ளி விவரங்களின்படி 1,146 மில்லியன் ஹெக்டேயர் பரப்பளவு, அதாவது இங்கிலாந்துக்கு சமமான பரப்பளவிற்கு தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் 300 மில்லியன் விலங்குகள் தீயில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
இது மிகப்பெரிய தொகை எனவும், யூகித்து பார்க்க முடியாத பேரழிவு எனவும் அவர் கூறியுள்ளார்.
விலங்குகளின் இறப்பை சரியாக மதிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள அவர்,. இருப்பிடத்திற்கும், உணவிற்கும் இந்த வனத்தையே சார்ந்து இருந்ததால் அவைகள் இங்கிருந்து தப்பி ஓடி இருக்க வாய்ப்பில்லை என்பதே விஞ்ஞானிகளின் கருத்து எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த தீ விபத்து தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தி ஒக்டோபரில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா