ஜோ்மனி முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அடுத்த வாரம் முதல் நாட்டுக்குள் நுழையும் அனைத்துப் பயணிகளிடமும் இலவச, கட்டாய கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான தயார்படுத்தல் அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவற்றுக்கு முன்னோடியாக பெர்லின் - டெகல் விமான நிலையம் நேற்று புதன்கிழமை பெரிய அளவிலான கொரோனா வைரஸ் பரிசோதனையைத் தொடங்கியது.
தற்போது டெகல் விமான நிலையத்தில் இரண்டு அறைகள் உடனடி கொரோனா பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்காக பெரிய இடமொன்று விமான நிலையத்தில் தயாராகி வருவதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் சபின் டெக்வெர்த் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்துக்கு இவ்வாறான சோதனைகளைத் தொடரவேண்டி ஏற்படாலம் என்பதால் பரந்த, வசதியான இடம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோய் பரவலை அடுத்து ஐரோப்பா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் பல மாதங்கள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்களைத் திறக்க இப்போது பல ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.
ஜேர்மனியின் பரபரப்பான பிராங்பேர்ட் போன்ற விமான நிலையத்தில் கொரோனா சோதனை கடந்த வாரமே ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிக ஆபத்தானவை எனக் கருதப்படும் நாடுகளில் இருந்து வருபவா்கள் உட்பட அனைவரையும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஜோ்மனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தயாராகி வருகின்றன.
ஜேர்மனியில் நேற்று புதன்கிழமை 684 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் பதிவாகினர். செவ்வாய்கிழமை இந்த எண்ணிக்கை 633 ஆக இருந்தது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 207,000 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், மொத்த உயிரிழப்புக்கள் 9,100-ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அடுத்த ஆண்டு நடுப்பகுதிவரை பரந்த அளவில் பயன்படுத்தக்கூடிய தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம் என ஜோ்மனியில் ஆராய்ச்சித் துறை அமைச்சர் அஞ்சா கார்லிக்ஸெக் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
எனவே, சமூக இடைவெளியைப் பேணுதல், முககவசங்களை அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாகப் பேணுமாறும் அவா் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஜெர்மனி