ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெர்லினுடன் கொண்டுள்ள மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், ஜேர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள நேட்டோா படையில் உள்ள தனது 12,000 துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை அமெரிக்க இராணுவம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
எனினும் ரஷ்யாவுடனான பதட்டங்கள் நீடிக்கும் நிலையில் மொத்தத் துருப்புக்களில் பாதி அளவானோரைத் தொடா்ந்தும் ஐரோப்பாவில் நிறுத்தி வைத்திருக்க அமெரிக்கா தீா்மானித்துள்ளது.
நேட்டோ கூட்டணியில் அமெரிக்காவின் பங்கு அதிகமாக இருந்தபோதும் அதனால் அமெரிக்காவுக்குப் பெரிய பயன்கள் ஏதும் இல்லை. ஏனைய நாடுகளே அதிக பயனடைகின்றன என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
நேட்டோவிற்கான ஏனைய நாடுகளில் நிதிப் பங்களிப்பு போதுமானதாக இல்லை. நாங்கள் தொடர்ந்தும் ஏனையவா்களால் உறிஞ்சப்படுபவா்களாக இருக்க முடியாது. எனவே, நேட்டோவில் எங்கள் படைகளைக் குறைக்கப்போகிறோம் என ட்ரம்ப் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறினார்.
ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப்படும் அமெரிக்கத் துருப்புக்கள் இத்தாலி மற்றும் அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய தலைமையகம் ஆகிய இடங்களுக்கு நகா்த்தப்படவுள்ளன.
மொத்தத்தில், ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்படும் 12,000 அமெரிக்கத் துருப்புக்களில் 6,000 துருப்புக்கள் ஐரோப்பாவில் பிற இடங்களிலேயே தொடா்ந்து தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜேர்மனியில் இருந்து துருப்புக்கள் விலக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவு நேட்டோ கூட்டணியை பலவீனப்படுத்தும் என ஜேர்மனிய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவரும், ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கூட்டாளியுமான நோர்பர்ட் ரோட்ஜென் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவெம்பரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடென் வெற்றிபெற்றால் ஜேர்மனியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான குடியரசுக் கட்சியின் தற்போதைய முடிவை அவா் மீளாய்வு செய்வார் என பிடனின் உயர்மட்ட உதவியாளர் இந்த மாத ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.