கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் கிட்டத்தட்ட 20 ஆயிரம் போ் வேலை இழக்கும் ஆபத்து உள்ளதாக அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை மிகப்பெரியளவில் பாதிக்கும் எனவும் அகதிகள் பேரவை எச்சரித்துள்ளது.
சிட்னியிலுள்ள ஒரு நகரத்தை மாதிரி பிரதேசமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு இடம்பெற்ற பிரதேசத்தில் வசித்த அகதிகளின் வேலைவாய்ப்பின்மை வீதம் கொரோனாவுக்கு முன்னர் 19.3 வீதமாக இருந்தது.
ஆனால் கொரோனாவுக்குப் பின்னா் வேலையில்லாதவர்களின் வீதம் கொரோனா 41.8 வீதமாக உயர்ந்துள்ளதாக அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான அகதிகள் இவ்வாறு வேலை இழக்கும்போது வீடுகளுக்கான வாடகையைக் கூட அவா்களால் செலுத்த முடியாது போகலாம். இதனால் அவர்கள் வீடற்றவர்களாக மாறக்கூடிய அபாயமுள்ளது.
அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வந்த பெரும்பாலானவர்கள் வாடகை வீட்டில் வசிப்பவர்கள். அவுஸ்திரேலியர்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளோடு மேலதிக பிரச்சினைகளையும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எதிர்நோக்குபவர்களாக உள்ளனர்.
அத்துடன் வேலை இழந்தவா்களுக்கு அரசு வழங்கும் கொடுப்பனவுகள் அகதிகளுக்கு வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளப்போகும் அபாயத்திலுள்ள அகதிகள் விடயத்தில் அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புக்களும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். அவா்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும் என அவுஸ்திரேலிய அகதிகள் பேரவையில் கொள்கை மற்றும் ஆய்வுப் பணிப்பாளர் ரெபேக்கா எக்கார்ட் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா