தென் சீனக் கடல் பிராந்தியத்துக்கு சீனா உரிமை கோரி வருவதை அடுத்து வொஷிங்டனுக்கும் பீ்ஜிங்குக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கடற்பரப்பில் சீனா போர் விமானங்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த வான் வழிப் போர்ப் பயிற்சியில் நீண்ட தூரம் பறந்து தாக்கவல்ல எச்-6ஜி மற்றும் எச்-6ஜே ஜெட் போர் விமானங்கள் பங்கேற்றதாக சீனா தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் புறப்படுதல்கள் மற்றும் தரையிறங்குதல், நீண்ட தூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குதல்கள் போன்ற பயிற்சிகளில் இதன்போது சீன விமானப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து ஈடுபட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரென் குய்கியாங் கூறினார்.
மேலும் அனைத்து இயற்கைச் சூழல்களையும் எதிர்கொண்டு இயங்கும் வகையில் விமானிகளின் திறன்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தப் பயிற்சிகள் அமைந்திருந்தன எனவும் அவா் தெரிவித்தார்.
எனினும் இதன்போது குண்டுகள் வீசி பயிற்சி இடம்பெற்றதா என்பது குறித்துத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.