இந்தியாவில் இருந்து லண்டனுக்கு கடத்திச் செல்லப்பட்ட 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
லண்டனில் வைத்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இந்தச் சிலை நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
ராஜஸ்தான் - பரோலி நகரில் உள்ள கடேஸ்வர் கோயிலில் இருந்து கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்டு லண்டனுக்குக் கடத்திச் செல்லப்பட்டது.
4 அடி உயரமான இந்த சிலை லண்டனுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளமை 2003 -ஆம் ஆண்டு தெரியவந்தது.
இதையடுத்து, லண்டன் தூதரக அதிகாரிகள் அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் சிலையைக் கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். கடந்த 2005-ஆம் ஆண்டு இந்த சிலையை வைத்திருந்தவர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தாமாகவே முன்வந்து அதனை ஒப்படைத்தார்.
இந்தச் சிலையை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்தனர். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் சென்ற இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், அந்த சிலை கடேஸ்வர் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட 9-ஆம் நூற்றாண்டு சிலை என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இந்த நடராஜர் சிலை இந்திய அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நடராஜர் சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பல சிலைகள் கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.