ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் இராணுவத்தினரும் திடீரென மோதிக்கொண்டதில் எல்லையில் பக்ரீத் பண்டிகைக்காக கூடியிருந்த இரு நாடுகளையும் சோ்ந்த 22 பொதுமக்கள் பலியாகினர்.
சாமன்-ஸ்பின் போல்டக் பகுதியில் வியாழன் இரவு பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பகுதியில் திருவிழாவுக்காக மக்கள் கூடியிருந்த ஆப்கானிஸ்தானியர்கள் 15 பேர் பலியாகினர் என ஆப்கானிஸ்தான் இராணுவம் தரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவம் இவ்வாறான தாக்குதலைத் தொடர்ந்தால் ஆப்கான் இராணுவம் தகுந்த பதிலடி அளிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் தங்களது நாட்டு மக்கள் 7 போ் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நேற்று அறிவித்துள்ளது.
இந்த மோதல் காரணமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தான் படைகள் கூட்டத்தின் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானியர்களைப் பாதுகாப்பதற்காக பாகிஸ்தான் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். தற்காப்பு நடவடிக்கையி்ல் மட்டுமே பாகிஸ்தான் படைகள் ஈடுபட்டன எனவும் வெளியுறவு அமைச்சு வெள்யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படையினரே முதலில் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எல்லையில் கூடியிருந்த ஆப்கானியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று நோய் நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. பக்ரீத் பண்டிகையை ஒட்டியே இரு நாட்டு மக்களும் எல்லைகளைக் கடக்க வசதியாக எல்லைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையிலேயே இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே எல்லையில் திடீர் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.