ஜோர்ஜியாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த கோடைகால முகாமில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த முகாமில் பங்கேற்ற 600 சிறுவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
ஜூன் 21 முதல் 27 வரை நடைபெற்ற இந்த கோடை முகாமில் 6 முதல் 17 வயது வரையான 600 சிறுவா்கள் பங்கேற்ற நிலையில் ஜூன் 24-ஆம் திகதி அதில் பங்கேற்ற சிறுவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து முகாம் இரத்துச் செய்யப்பட்டு சிறுவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை, பொருத்தமான கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியே கோடை முகாம் ஒழுங்கமைக்கப்பட்டது என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் பங்கேற்பாளர்கள் பலர் முக கவசங்களை அணியவில்லை. காற்றோட்டத்தைப் பேண கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்கவில்லை. ஒரே அறைகளில் பலர் கூடி ஆடிப்,பாடிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவையே கொரோனா தொற்று பெருமளவானவா்களுக்குப் பரவக் காரணிகளாக இருந்திருக்கலாம் எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த பங்கேற்பாளர்களில் 6 முதல் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 51 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11 முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர்கள் 44 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளர்.
கொரோனா வைரஸுக்கு எல்லா வயதினரும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை இந்தப் தொற்று பரவல் உணர்த்தியுள்ளது என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.