இராணுவத்தினர் அச்சுறுத்துவது தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் கூறிவரும் செயற்பாடானது தேர்தல் வெற்றிக்கான உத்தியே எனவும் சம்மந்தி ஊடாக நெருங்கிய தொடர்பு கொண்ட அவருக்கு இவ்வாறான அச்சுறுத்தல் என்பது சாத்தியமற்றது என அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வர்த்தகர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அங்கயன் இராமநாதனிடம் ஊடகவியலாளர் குறித்த விடயம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று காலை கிளிநொச்சி சேவை சந்தை உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறும் பகுதிகளில் அங்கயன் இராமநாதன் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இதன்போது அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கறுப்பு உடை தரித்த படையினர் தம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்கின்றார்கள் என ஜனாதிபதிக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளமை தொடர்பில் அங்கயன் இராமநாதனிடம் ஊடகவியலாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமது வெற்றிக்காக ஒவ்வொரு உத்திகளை பயன்படுத்துவார்கள். அது போன்றதாகவே அவர் இவ்வாறான உத்தியை பயன்படுத்துகின்றார். அவருடைய சம்மந்தி ஊடாக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமக்கு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பில் கருத்துக்களை கூறி தமது கட்சிக்கான வெற்றிக்கு அவர் பயன்படுத்தும் உத்தியாகவே பார்க்கின்றேன். மக்கள் இதனை நன்கு அறிவார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அரசுடனான நெருங்கிய தொடர்புடைய நீங்கள் மொட்டு சின்னத்தில் கேட்காது கை சின்னத்தில் கேட்டு மக்களை ஏமாற்றுவதாக ஏனைய கட்சிகள் குற்றம் சாடுகின்றனர் அது உண்மையா என அவரிடம் வினவியபோது,
ஏனையவர்கள் போன்று கட்சி மாறி மாறி நான் தேர்தலில் களம் இறங்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை சுதந்திர கட்சியிலேயே உள்ளேன். அந்த கட்சியிலேயே நான் தொடர்ந்தும் உள்ளேன். எனவே நான் அந்த கட்சியிலேதான் இன்றும் போட்டியிடுகின்றேன். மற்றவர்கள் போல் மாறி மாறி தேர்தல்களில் போட்டியிடவில்லை. தமது அரசியலிற்காக இவ்வாறான பொய்யான பரப்புரைகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி