சீன நிறுவனத்தின் ரிக்டோக் குறும் வீடியோ செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இதனைச் செய்ய முடியும் என வொஷிங்டனில் நேற்றிரவு செய்தியாளா்களிடம் பேசிய ட்ரம்ப் கூறினார்.
அத்துடன், சீன நிறுவனத்திடம் இருந்து இந்தச் செயலியை மைக்ரோசொப்ட் வாங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவா் நிராகரித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க செனட்டர்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயரதிகாரிகள் ரிக்டோக் செயலியை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே இந்தச் செயலிக்குத் தடை விதிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.
ரிக்டோக் செயலிக்கு பதில் வேறு செயலியைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி யோசித்து வருகிறோம் எனவும் அவா் மேலும் கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் ரிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ம் அமெரிக்காவும் ரிக்டோக் செயலியை தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.