"யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு, வேலணை, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளிலே 60 அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்து செம்பாட்டுத் தோட்டக் கிணறுகளிலும் , தோம்பியார் தேவாலயக் கிணற்றிலும் புதைத்தபோது அரசுடனும் இராணுவத்துடனும் இருந்த டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் இன்று இந்த மக்கள் முன்பாக வந்து வாக்குக் கேட்கின்றார்கள். தமிழ் இனத்தின் படுகொலையாளிகளான இவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
"இந்த மண்ணிலே இடம்பெற்ற போரில் 4 இலட்சம் வரையான பொது மக்களும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீர்ர்களும் உயிரைத் தியாகம் செய்தனர் இவ்வாறு இந்த மண்ணுக்காக உயிர்த்தியாகம் இடம்பெற்ற வேளை பலியெடுத்தவர்களோடு கைகோர்த்து நின்றவர்கள் ஏதோ கதைகளைக் கூறிக்கொண்டு வாக்குக் கேட்கின்றனர்.
இந்தப் பாரதிபுரம் மண்ணிலே 12 மாணவர்கள் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் உட்பட இறுதிப்போரில் மட்டும் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்தமை தொடர்பில் புள்ளிவிபரங்களோடு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் சாட்சியம் அளித்திருந்தார்.
இவ்வாறெல்லாம் நாம் கொல்லப்படும்போதும், அழிக்கப்படும்போதும் அரசுடனும் இராணுவத்துடனும் ஒன்றா இருந்த சந்திரகுமார், டக்ளஸ் போன்றவர்கள் இன்று இந்த மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலே வேலணை, மண்கும்பான், அல்லைப்பட்டி , மண்டைதீவு ஆகிய இடங்களில் 60 பேரைக் கொன்றழித்து செம்பாட்டுத்தோட்ட கிணறுகளிலும், தோம்பியார் தேவாலயக் கிணற்றிலும் இவர்களே தாட்டனர். அதனைக் கிளறுமாறு நான் நாடாளுமன்றிலும், சாட்சியத்திலும் தெரிவித்தேன். இருப்பினும் எவையும் இடம்பெறவில்லை.
இன்று நாடே ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது. வீதிகள் தோறும் காவலரண்கள் அதிகரிக்கின்றன. 17 அமைச்சுக்களில் இன்று இராணுவத்தில் தளபதிகளாக இருந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இராணுவத்தினர் என இராணுவ அடித்தளம் இடப்படுகின்றது. இதனை டக்ளஸோ, சந்திரகுமாரோ அல்லது அங்கஜனோ கேட்கமாட்டார்கள். நாம்தான் இவற்றைத் தட்டிக் கேட்க முடியும்" - என்றார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி