கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலன்னறுவை மாவட்டம் லங்காபுர பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளருடன் தொடர்பு பட்டவர்கள் என்ற அடிப்படையில் 450 மாணவர்கள் உள்ளிட்ட 539 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு பேதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத் தொற்றாளர் ஒருவர் மூலமாக பொலன்னறுவை லங்காபுர பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. லங்காபுர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றும் குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குறித்த பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அரச வங்கி ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டு அதனுடன் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த 325 பேரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 158 பேரின் பரிசோனை முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர்இ வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தரப்பினர்களுக்கு இடையில், பிரதேச செயலக உறுப்பினர்கள், பிரதேசவாசிகள், தொற்றாளரின் உறவினர்கள் போன்று பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் லங்காபுர தொற்றாளரின் மனைவுக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது 450 மாணவர்கள், 82 ஆசிரியர்கள் மற்றும் 7 ஊழியர்கள் என 539 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை