இலங்கையில் கொரோனா அபாயம் தொடரும் நிலையில் பிசிஆர் பரிசோதனைகளை இன்று முதல் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளை இன்று முதல் அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தொற்றுநோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கந்தகாடு போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 600 ஆக உள்ளதாக COVID-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் புனர்வாழ்வு பெறும் கைதிகள் 482 பேர் மற்றும் அலுவலக ஊழியர்கள் 66 பேர் அடங்குகின்றனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தலை இதுவரை 28,792 பேர் நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1866 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2815 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை