Thursday 28th of March 2024 06:00:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
மகிந்தவின் முகத்தில் ஓங்கி அடிக்கும் வகையில் தமிழர்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்!

மகிந்தவின் முகத்தில் ஓங்கி அடிக்கும் வகையில் தமிழர்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்!


மகிந்தவின் முகத்தில் ஓங்கி அடிக்கும் வகையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் சுமந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

"எங்களைப் பற்றி நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்யவேண்டிய தேவை கிடையாது என்று எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு நாங்கள் கொடுக்கின்ற செய்தியாக இருக்கவேண்டும். முகத்தில் அடித்தால்போல் நீங்கள் தேர்தலிலே வாக்களிக்க வேண்டும். இன்றைய தேவை அதுதான். அது பலமான அடியாகவும் இருக்கவேண்டும்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளாரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அச்சுவேலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்தத் தேர்தலில் நாம் ஒரு குரலாக ஒலிக்கவேண்டும் என்று விரும்புகின்றோம். தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஒரே குரலாக ஒலிக்கவேண்டும் என்று நாம் கேட்கின்றோம். அது பலமான குரலாக இருக்கவேண்டும் என்றும் நாம் விரும்புகின்றோம். அப்படியான தேவை இன்று அத்தியாவசியமானதாக இருக்கின்றது.

கடந்த சில நாள்களாகத் தென்னிலங்கையிலிருந்து வருகின்ற செய்திகளைப் பார்க்கின்றபோது, அவற்றிலே குறிப்பாக காபந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஏதோ அவர்கள் கொடுப்பவற்றை நாங்கள் வாங்கித் திண்பவர்கள் போல் பேசிக்கொண்டிருக்கின்றார்.

நாங்கள் எமது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நாளிலிருந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள எமது அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்து, “அதெல்லாம் தர முடியாது, சமஷ்டி என்றால் நாம் விட்டுக்கொடுக்கவே மாட்டோம், அரசியல் தீர்வு என்ற ஒன்றும் இல்லை, நாம் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியைக் கொடுப்போம்” என்று ஏதோ தாங்கள்தான் எங்களுக்கானதைத் தீர்மானிக்கின்றார்கள் என்ற விதத்தில் மஹிந்தவும் அவரின் சகாக்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தேர்தலிலே நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கின்ற செய்தி மிகவும் பலமானதாக இருக்கவேண்டும். எங்களைப் பற்றி நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்யவேண்டிய தேவை கிடையாது என்று எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு நாங்கள் கொடுக்கின்ற செய்தியாக இருக்கவேண்டும். முகத்தில் அடித்தால்போல் நீங்கள் தேர்தலிலே வாக்களிக்க வேண்டும். இன்றைய தேவை அதுதான். அது பலமான அடியாகவும் இருக்கவேண்டும்.

ஒட்டுமொத்தமாக - தமிழ் இனம் ஒன்றாக - வடக்கிலும் கிழக்கிலும் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குகின்ற அந்த வாக்குகளில்தான் அந்தச் செய்தியை அழுத்தமாக - இறுக்கமாக முகத்தில் அடித்தால்போல் மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் சொல்ல முடியும்.

இந்தக் கடமையை எங்களுக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய தன்மானத்துக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய பிறப்புரிமையை நிலைநாட்டுவதற்காகச் செய்யவேண்டும். இன்று அதைச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைவிட வேறு வழி கிடையாது. வேறு எந்தவொரு தமிழ்க் கட்சிக்கும் உறுப்பினர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புகின்ற திராணி கிடையாது.

மாற்று அணி என வந்துள்ளவர்களை நீங்கள் திருப்பிப் பார்க்கவே கூடாது. அவர்கள் எல்லாம், ஆசன ஆசைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிப்போனவர்கள். அத்தோடு இன்னுமோர் அணியிருக்கின்றது. இளைஞர்களுக்கு அரச வேலைபெற்றுத் தருவதாக விண்ணப்பப் படிவம் வாங்கியிருக்கின்றார்கள். அதற்கு நீங்கள் விலைபோய்விடக் கூடாது.

இந்தத் தேர்தலிலே அங்கஜன் இராமநாதன் நாடாளுமன்றத்துக்குப் போகக் கூடாது. அப்படிப் போவதாக இருந்தால், வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியாக ஒரு கேள்விக்குறியாக இருந்துகொண்டிருக்கும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், அச்சுவேலி, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE