கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய செயற்பாடுகளை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருதாக எழுத்து மூலம் அறிவித்தால் தமது தொழிற்சங்க போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
துறைமுக கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னரில் இருந்து துறைமுக ஊழியர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்கள் நேற்று (31) முதல் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதன் காரணமாக கொழும்பு துறைமுக பணிகள் அனைத்தும் முற்றுமுழுதாக தடைபட்டுள்ளன.
கிழக்கு முனைய செயற்பாடுகளை கூடிய விரைவில் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வர வேண்டும் என 23 தொழிற்சங்கள்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையல் தமது கோரிக்கையை பொதுத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த நிலையில் தமது தொழிற்சங்க நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோருவதாக கொழும்பு துறைமுகத்தின் வியாபார பிரிவின் வர்த்தக பிரிவு சேவையாளர்களின் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஸ்ரீயாமல் சுமனரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது போராட்டத்தை கைவிட எழுத்து மூலம் உறுதியளிக்காவிடின் தொடர்ந்தும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக கொழும்பு துறைமுகத்தின் சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரே தெரிவித்துள்ளார்.
தமது போராட்டம் தொடருமானால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் போராட்டகாரர்களுடன் கலந்துரையாட அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஆகியோர் நேற்றிரவு அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விமல்வீரங்ச, எதிர்வரும் 6 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு அவர்களிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி தனக்கு தெரிவித்தாக கூறினார்.
இந்த கலந்துரையாடலும் பயனற்று போன நிலையில், கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியமும் நான்காவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஹம்மாந்தோட்டை துறைமுகத்தை ஐக்கிய தேசியக் கட்சி விற்கும் போது அவர்களுக்கு சார்பாக சில தெழிற்சங்கங்கள் இருந்தாக கூறினார்.
கடந்த நல்லாட்சியில் அது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அவ்வாறான தொழிற்சங்கங்கள் மௌனமாக இருந்தாகவும், அன்று மௌனமாக இருந்தவர்கள் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தவறு என கூறுகின்றனர்.