Thursday 25th of April 2024 06:12:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
அன்று ராஜபக்சக்களுடன் 'டீல்' பேசிய சரா இன்று எங்களுக்கு எதிராக 'றீல்' விடுகிறார்! சிறீகாந்தா பேச்சு!

அன்று ராஜபக்சக்களுடன் 'டீல்' பேசிய சரா இன்று எங்களுக்கு எதிராக 'றீல்' விடுகிறார்! சிறீகாந்தா பேச்சு!


இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜபக்சக்களுடன் 'டீல்' பேசிய நண்பர் சரவணபவன் இப்போது எங்களுக்கு எதிராக 'டீல்'களைப் பிரஸ்தாபித்து 'றீல்' விட்டிருக்கின்றார் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சட்டத்தரணி ந.சிறீகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"2018 ஆண்டு ஐப்பசி மாதத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேனவால் திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரிடம் நாடாளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை.

தமிழ், முஸ்லிம் எம் பிக்களுக்கு வலைவீசி விலைபேசி அவர்களை இழுத்தெடுக்கும் நடவடிக்கைகள் மஹிந்த தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டன. கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலரோடும் 'டீல்' பேசும் படலம் ஆரம்பித்தது. அதில் முதலில் சிக்கியவர் வியாழேந்திரன்.

கட்சி தாவி ராஜபக்சவுடன் போய்ச் சேர்ந்த அவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு அவசரமாகக் கூடியது. அதற்கு முன்னதாக மஹிந்தவின் அழைப்பின் பேரில் சம்பந்தன் சென்று அவரைச் சந்தித்திருந்தார். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சம்பந்தனே அந்தத் தகவலைச் சொன்னார். சில கோரிக்கைகளை மஹிந்தவிடம் தான் தெரிவித்தார் எனக் கூறினார். கட்சியுடன் பேசித்தான் முடிவு எடுக்கலாம் என்று மஹிந்த கூறினார் என்று சம்பந்தன் தெரிவித்தார்

நீங்கள் மஹிந்தவைச் சந்தித்திருக்கக் கூடாது. அவர் பிற்கதவு வழியால் பிரதமர் ஆக்கப்பட்டிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் சந்தித்தால் அது அவரைப் பிரதமராக நாங்கள் அனைவரும் அங்கீகரிப்பதாக அமைந்து விடும். உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நான் ஒருபோதும் மஹிந்தவிடம் போயிருக்கமாட்டேன் என்று அவருக்கு நேரடியாகக் கூறினேன்.

அப்போதுதான் அவரின் நடவடிக்கையின் தாற்பரியத்தை அவர் முற்றாக உணரத் தொடங்கினார் என்பதை அவரின் முகத் தோற்றத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அத்துடன் அவர் பதில் எதுவும் பேசவில்லை.

அந்தக் கூட்டத்தில் நாங்கள் கலந்து பேசி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி நீக்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவிப்பது என முடிவெடுத்தோம். அத்துடன் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மஹிந்தவின் அரசை எதிர்ப்பது எனவும் முடிவு செய்தோம்.

இந்தக் கூட்டத்தில் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன், ராகவன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், ஜனா கருணாகரம் மற்றும் நான் ஆகியோர் கலந்துகொண்டோம்

அந்தக் கூட்டத்தில் சுமந்திரன் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார். சரவணபவன் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க முன் வந்திருக்கின்றார் என்றும், அவருடன் 'டீல்' பேசப்படுகின்றது என்றும், சரவணபவன் பெருந்தொகையான பணத்துடன் அமைச்சுப் பதவியையும் கோரி இருக்கின்றார் என்றும் அவர் கூறினார். அத்துடன் அடுத்த தேர்தலில் தேசியப் பட்டியலில் தன்னை எம்.பியாக மஹிந்த தரப்பு நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார் என்று சுமந்திரன் கூறினார்

அடுத்த நாள் கூட்டறிக்கை தயாரிப்பதற்காக நாங்கள் கூடியபோது சரவணபவனுடன் 'டீல்' பேசப்பட்டிருப்பதை சுமந்திரன் திரும்பவும் உறுதிப்படுத்தினார். அதேவேளையில், இன்னும் ஒரு கூட்டமைப்பு எம்.பி. பற்றியும் அவர் சில தகவல்களைத் தெரிவித்தார்

எமது கூட்டறிக்கையில் மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதில்லை என நாம் திட்டவட்டமாகத் தெரிவித்தோம். இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எம்மைப் பின்பற்றத் தீர்மானித்தது. மஹிந்தவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பது உறுதியானது

சரவணபவன் மஹிந்தவிடம் பேசிய டீலும் கைவிடப்பட்டது. நான் கூறிய கூட்டமைப்புப் பிரமுகர்கள் எவரிடமும் இதைக் கேட்டுப் பார்க்கலாம்.

இந்த இலட்சணத்தில் சரவணபவன் 'டீல்'களைப் பற்றிப் பேசக்கூடாது. மனச்சாட்சி இருந்தால் அவர் ஒழுங்காக நடக்க வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலில் 2010இல் சிவாஜிலிங்கம் போட்டியிட்டது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும். போர்க்குற்றவாளிகளான மஹிந்த ராஜபக்சவையோ அல்லது சரத் பொன்சேகாவையோ ஆதரிக்கக் கூடாது என்பதில் தமிழ்த் தரப்பில் நாம் உறுதியாக இருந்தோம். இந்த நிலைப்பாடு சரியானது என்பது பின்னர் வந்த நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட பல நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன. இதை முன்னெடுத்தவர்கள் கட்சி சார்பற்றவர்கள்.

கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கட்சிகளோடு பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை காணப்படவில்லை

இந்தநிலையில்தான் அந்த முயற்சி நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் கைவிடப்பட்டது. அந்தநிலையில்தான் சிவாஜிலிங்கம் அனந்தி சசிதரன் ஆதரவுடன் களத்தில் இறங்கினார். அது கொள்கை ரீதியாக அவர் எடுத்த முடிவு. அந்த முடிவுடன் நான் உடன்பட்டிருக்கவில்லை

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசியது. பல சுற்றுப் பேச்சுசுகள் நடந்தன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்களிடமும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சமர்ப்பித்துப் பேசவேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

பேச்சின் இறுதி நாளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி விதித்த ஒரு நிபந்தனை மற்றக் கட்சிகளால் ஏற்கப்படவில்லை. இக்கட்சிகள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன. ஆனாலும், பிரதான சிங்கள வேட்பாளர்களுடன் பேசுவது கைகூடவில்லை

கோட்டாபாய ராஜபக்ச பேச விரும்பவில்லை. சஜித் பிரேமதாஸவும் பின்னடித்தார். இந்தநிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கூட ஆலோசிக்காமல் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தது. இதில் நாம் அதிருப்தி அடைந்து ரெலோ தலைமைக் குழுவைக் கூட்டினோம்

சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவதை ரணில் விரும்பவில்லை என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. அவரின் தூண்டுதலால்தான் தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவு எடுத்தது என்று நாம் நம்பினோம்

ஏனெனில் எவரை ஆதரித்தாலும் அந்த முடிவை நேரத்தோடு அறிவிக்காமல் தேர்தலுக்கு ஒரு சில தினங்கள் முன்பே அறிவிக்க வேண்டும் என்று சுமந்திரன். ஏற்கனவே மாணவர் ஒன்றியக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். நேரத்தோடு முடிவை அறிவித்தால் நாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராக மற்றத் தரப்பு இதனை உபயோகித்து அவரைத் தோற்கடித்து விடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். ஆனால், இதற்கு மாறாக தமிழரசுக் கட்சி நடந்து கொண்டது

ரெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு எல்லோராலும் தீவிரமாகக் கண்டிக்கப்பட்டது. இருந்தும் பெரும்பான்மையோர் தமிழரசுக் கட்சியுடன் இசைந்து செல்லவே விரும்பினர். நாடாளுமன்றத் தேர்தலை அவர்கள் மனதில் கொண்டிருந்தனர்

ரணில் - தமிழரசுக் கட்சி கூட்டுச்சதிக்கு எதிராக சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற பிரேரணை தோற்கடிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து நான் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க முடிவெடுத்தேன். இதுதான் உண்மையில் நடந்தது.

சஜித்தைத் தோற்கடிக்க ரணில் தரப்பு செய்த சதியால்தான் கோட்டாபயவுக்கு எதிர்பாராத பாரிய பெரும்பான்மை கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவுபட்டது. ஆனால், ராஜபக்சக்களுடன் 'டீல்' பேசிய சரவணபவன் இப்போது முழுப் பொய்களைக் கக்கியிருக்கின்றார். கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றார். நீதியரசர் விக்னேஸ்வரனையும் அநாவசியமாக வம்புக்கு இழுக்கின்றார். நண்பர் சரவணபவனின் திட்டமிடப்பட்ட பொய்களுக்கு காலம் விரைவில் பதில் சொல்லும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE