இந்தியாவில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரிப்பை சந்தித்த வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்திலும் 55 ஆயிரத்தை நெருங்கிய புதிய தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நாளாந்த கொரோனா நிலவர அறிக்கையின் அடிப்படையில் இன்று (ஓகஸ்ட்-02) காலை 8.00 மணி வரை 54 ஆயிரத்து 735 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 17 இலட்சத்து 50 ஆயிரத்து 723 ஆக அதிகரித்திருந்தது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 853 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 4 இலட்சத்து 31 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 15 ஆயிரத்து 316 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக தமிழ்நாட்டில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 4 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஆந்திர பிரதேசத்தில் ஆயிரத்து 1407 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 259 பேருக்கும் புது டெல்லியில் 3 ஆயிரத்து 989 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1 இலட்சத்து 36 ஆயிரத்து 716 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2412 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை 11 இலட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 5 இலட்சத்து 67 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்தும் 3வது இடத்தில் இருந்து வருகிறது.
இதுவரை உலகளவில் ஒரு கோடியே 80 இலட்சத்து 26 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 974 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
47 இலட்சத்து 64 ஆயிரத்து 318 தொற்றுகளுடன் அமெரிக்க யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உச்ச நிலைபெற்று முதலாவது இடத்திலும் 27 இலட்சத்து 8 ஆயிரத்து 876 தொற்றுகளுடன் பிரேசில் 2வது இடத்திலும் நீடிக்கிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, அமெரிக்கா, உலகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, புது தில்லி