களுத்துறை சிறைச்சாலையில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த கைதிகளில் மூவர் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை தேடிக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் மூன்று பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையின் தனி இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தப்பிச் சென்ற கைதி ஒருவர் களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய இரு கைதிகளையும் தேடி களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து கூட்டு செயற்பாடு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு தப்பித்து சென்றவர்கள் இன்று அதிகாலை சிறைச்சாலை பாதுகாப்பு சுவர் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பேருவளை மற்றும் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 23, 24 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பி சென்ற கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களா அல்லது கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்களா என்பது குறித்த தகவல் எவையும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.