"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடும் எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் அடுத்த ஒரேயொரு தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே."
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.
திருகோணமலையில் மூவின மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நான் மக்களுக்கான சேவையைத் தொடர்வதற்கான அங்கீகாரத்தைக் கோரி நிற்கின்றேன். சிலவேளைகளில் எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாதிருப்பீர்களானால் உங்களது அடுத்த தெரிவாக சிரேஷ்ட அரசியல்வாதியான சம்பந்தனாகவே இருக்க வேண்டும்.
அவர் எனது தந்தை புஞ்சிநிலமேயின் நெருங்கிய நண்பர். அவர்கள் இருவரும் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாவட்டத்திலிருந்து ஒன்றாக நாடாளுமன்றத்துக்குச் சென்றவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களின் நீண்ட மக்கள் சேவையும், அரசியல் அனுபவமும் இன்றியமையாதவொன்றாக உள்ளது.
சம்பந்தனும், எனது தந்தையாரும் இன,மத, மொழி பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து மக்கள் சேவைகள் பலவற்றை முன்னெடுத்துள்ளார்கள்" - என்றார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை