ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 350-க்கும் மேற்பட்ட யானைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இயற்கையான நச்சுத்தன்மையால் அவை இறந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.
இந்த யானைகள் மரணம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இறந்த 350-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்படவில்லை எனவும் ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவில் உலகிலேயே மிக அதிகமான ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. இங்கு சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் யானைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்குள்ள ஓகவாங்கோ என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 350-க்கும் மேற்பட்ட யானைகள் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விலங்குகள் தொண்டு அமைப்பொன்றின் பணிப்பாளர் நியால் மெக்கேன் இந்த யானைகளின் உயிரிழப்பை கண்டுபிடித்து உறுதி செய்தார்.
பெரும்பாலான யானைகள் முகம் தரையில் படும்படி சுருண்டு விழுந்து இறந்துள்ளன. மேலும் அவை இறப்பதற்கு முன்னர் ஒரே இடத்தில் வட்டமடித்துள்ளன. இதனால் யானைகளின் நரம்பு மண்டலத்தில் தொற்று ஏதும் தாக்கியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே இருந்ததால் அவை வேட்டையாடப்படவில்லை எனவும் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர். “
மேலும் இந்த யானைகள் இறப்பில் ஆண், பெண், வயது என்ற எந்தவித வித்தியாசமும் இல்லாமல் இருந்ததை அரசு உணர்ந்தது. பல யானைகள் இறப்பதற்கு முன்னர் மிகவும் பலவீனமாகவும் சோம்பலாகவும் மயக்கமாகவும் தோன்றின. சில யானைகள் திசை திருப்புதல், நடப்பதில் கஸ்டம், கால்களில் வீக்கம் ஆகிய உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் யானைகளின் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்காக தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகளில் யானைகள் அனைத்தும் இயற்கையான நச்சுத்தன்மையால் இறந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடா்பில் தொடர்ந்தும் ஆராயப்படும் என போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.