வியட்நாமில் மத்திய நகரமான டனாங்கில் ஒரு வாரத்துக்கு முன் பரவத் தொடங்கிய புதிய கொரோனா தொற்று அலை அங்கு தீவிரமடைந்து வருகிறது.
நகரத்தில் குறைந்தது நான்கு தொழிற்சாலைகளில் தொற்று நோய் பரவியுள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் 3,700 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனர் என வியட்நாமிய ஊடகங்கள் இன்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமில் முதன்முதலில் ஜனவரி பிற்பகுதியில் கொரோனா தொற்று நோய் பரவியது. எனினும் தீவிரமாகத் தொற்று நோயை எதிர்த்துப் போராடி அந்நாடு மீண்டது. வியட்நாமின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்ததுடன், பரவலாக பாராட்டுக்களையும் பெற்றது.
கடந்த வாரம் பரவ ஆரம்பித்த புதிய தொற்றுக்கு முன்னரான மூன்று மாதங்களாக அங்கு சமூகத் தொற்றுக்கள் எவையும் பதிவாகவில்லை.
இந்நிலையில் புதிய தொற்று பரவலை எதிர்த்து வியட்நாம் தற்போது போராடி வருகிறது.
வியட்நாம் சுற்றுலா மையமான டனாங் நகருடன் தொடர்புடைய 621 தொற்று நோயாளா்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை 6 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இங்கு புதிய தொற்று பரவில் ஜூலை 25 அன்று முதலில் கண்டறிய்பட்டது.
ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரம் உட்பட நாட்டில் குறைந்தது 10 இடங்களுக்கு தொற்று நோய் பரவியுள்ளது.
தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட நான்கு தொழிற்சாலைகளில் ஒன்று செயல்பாட்டை நிறுத்தியுள்ளதாக தனாங்கின் தொழில்துறை பூங்கா நிர்வாகக் குழுவின் தொழிற்சங்கத் தலைவா் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி வியட்நாமில் கடந்த ஏழு நாட்களில் 52,000 கொரோனா வைரஸ் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான 1.1 மில்லியன் மக்களைக் கொண்ட டனாங்கின் அனைத்து மக்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டனாங் நகரம் கடந்த வாரம் முதல் முடக்கப்பட்டுள்ளது. நகரத்தில் இருந்து யாரும் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்