கொரோனா நோயாளிகளை தொலைவில் இருந்து சிகிச்சையளிக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அவர்களை நெருங்கிச் செயற்பட வேண்டியுள்ளதால்தான் மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா தொற்று அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.
அதனை தடுப்பதற்காக பாதுகாப்பு உடை உள்ளிட்ட உபகரணங்களுடன் பணியாற்றும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றமை உலகளாவிய மருத்துவத் துறையில் பெரும் சவாலாக உள்ள விடயமாகும்.
இதனை போக்கும் வகையில் தமிழ்நாடு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் செயல்பட்டு வரும் உடல் ஆரோக்கியம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையம் (எச்.டி.ஐ.சி.), ஆரோக்கியம் தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்தி வரும் புத்தொழில் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஹெலிக்சன் நிறுவனம் ஆகியவை புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளது.
இந்த கருவியை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விரலில் பொருத்தினால் போதும். அந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள ‘ரிமோட்’ சென்சார் மூலம் உடல் வெப்பநிலை, ஒட்சிஜன் அளவு, இதய துடிப்பு, சுவாசம் போன்ற முக்கியமான அளவீடுகளை மற்றொரு அறையில் இருந்து செல்போன் மூலமாகவோ அல்லது மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமோ துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த கருவி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு பொருத்திய கருவியை மற்றொரு நோயாளிக்கும் பொருத்தி கொள்ளலாம். புதிய கருவியை ஓராண்டு வரை பயன்படுத்தலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல இந்திய தெற்கு ரெயில்வேயின், சிக்னல் மற்றும் தொலை தொடர்பு துறையின் சார்பில் கொரோனா நோயாளிகளை தொடாமல் அவர்களுக்கு தேவையான மருந்துகள், உணவு, தண்ணீர் வழங்க ‘ரெயில் மித்ரா’ என்ற ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோ நோயாளிகளை தொடாமலேயே அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளும் தன்மை கொண்டது.
மேலும் இந்த ரோபோவில் உள்ள கேமரா மூலம் கொரோனா நோயாளிகளுடன் பேச முடியும். மேலும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய தண்ணீர் போத்தல்கள், முககவசங்களை எடுத்து சென்று அகற்றும் வசதியும் உள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை