அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொவிட்-19 தனிமைப்படுத்தல் உத்தரவுகளை அமுலாக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் எவரும் அதிக அபராதங்களைச் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் இவ்வார ஆரம்பம் முதல் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் நகர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
எனினும் கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் தன்மைப்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை முறையாகப் பேணவில்லை என அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் இன்று செவ்வாக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே சுய-தனிமைப்படுத்தல் உத்தரவுகளை அமுல்படுத்துவதற்காக 500 இராணுவத்தினர் இந்த வாரம் விக்டோரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஆண்ட்ரூஸ் கூறினார்.
அத்துடன் வீடுகளில் காட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறுவோருக்கு சுமார் 5,000 அவுஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டார். அவசர மருத்துவ கவனிப்பு தேவையானோருக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய எந்தக் காரணங்களும் இல்லை. தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் யாரேனும் வீடுகளை விட்டு வெளியேறியது கண்டறியப்பட்டால் கடும் அபராதத்தைச் செலுத்துவதைத் தவிர்க்க முடியாது எனவும் மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்ட்ரூஸ் கூறினார்.
விக்டோரியாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரையான கடந்த 24 மணி நேரங்களில் 439 புதிய கொரோனா தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் அவுஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,000 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா