லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நேற்று திங்கட்கிழமை 50 இலட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
ஆரம்பத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மிக மெதுவாகவே இருந்தாலும் இப்போது உலகின் மிக அதிக தொற்று நோயாளா்களைக் கொண்ட பகுதியாக அது மாறியுள்ளது.
சுமார் 640 மில்லியன் மக்கள் வசிக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள சனத்தொகை அடர்த்திமிக்க நகரங்கள் மற்றும் வறுமை காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது கடினமாக மாறியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொலம்பியா சுகாதார அமைச்சால் நேற்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட புதிய தொற்று நோயாளா்களுடன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தொற்று நோயாளா்களின் தொகை 50 இலட்சத்தைக் கடந்தது.
அத்துடன், லத்தீன் அமெரிக்க நாடுகளின் கொரோனா வைரஸ் பலியெடுத்தவா்களின் தொகையும் 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலின் மொத்த உயிரிழப்புக்கள் நேற்று திங்கட்கிழமை 96 ஆயிரத்தை நெருங்கின. மெக்சிகோவில் மரணங்கள் 48 ஆயிரத்தைக் கடந்து பதிவாகின.
லத்தீன் அமெரிக்காவின் இந்த இரு நாடுகளும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.
4.8 மில்லியன் நோய்த்தொற்று நோயாளா்களுடன் வட அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிக வறுமை, நகரமயமாக்கல் மற்றும் முறைசாரா தொழிலாளர்களில் அதிக தொகை ஆகியனவே லத்தீன் அமெரிக்காவில் தொற்று நோய் தீவிரமாவதற்கான காரணிகளாக உள்ளதாக அமெரிக்கா மற்றும் கரீபியன் பொருளாதார ஆணையம் மற்றும் பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பின் ஜூலை 30 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சேரிகளில் வாழ்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்நாடுகளில் தொற்றுநோயால் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் என அமெரிக்கா மற்றும் கரீபியன் பொருளாதார ஆணையம் மற்றும் பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.