நாளைய தினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இம்முறை திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 288,868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களது வாக்குப்பதிவிற்காக 307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் என்பன அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அனைத்து பகுதிகளுக்குமான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார சேவையினர்களது மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தலின் முன்னரும் பின்னரும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தொற்று நீக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளை வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மறுதினம் காலை முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இம்முறை பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் 13 மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 14 போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை