கொரோனா தொற்றாளருடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப் பட்டிருந்தவர்கள் கட்டுப்பாடுகளை மீறி இரகசியமாகச் சென்று வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
பொலன்னறுவை லங்காபுர பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டிருந்த நிலையில் அவரது வழித்தடம் கண்டறியப்பட்டு அவர் பணியாற்றிய பிரேதசசெயலகம் உள்ளிட்ட லங்காபுர பிரதேச சபை மற்றும் அரச வங்கி ஒன்றும் தற்காரிகமாக மூடப்பட்டு அஙகு பணியாற்றியவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு முழுவதும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் குறித்த பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களது வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுத்தேர்தல் வாக்களிப்பு தினமான நேற்று பி.பகல் 4.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் லங்காபுர பிரதேச சபையின் தலைவரும் அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் கட்டுப்பாடுகளை மீறி இரகசியாமாக வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இரகசியமாக வீட்டில் இருந்து குடும்பமாக வெளியேறிய இவர்கள் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாற கொரோனா தொற்றாளருடன் தொடர்புபட்ட நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இவர்கள் கட்டுப்பாட்டை மீறி வக்களித்து திரும்பியதை அடுத்து அப்பகுதியில் கொரோனா பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை